Thursday, August 19, 2010

புளியமரப் பொழுது

புளியமரப் பொழுதின் பகல் ஞாபகங்களின்
நிழல் நடுவே மின்னுகிறது தங்க வெயில்

எல்லாக் காலத்திலும் பறவைகள்
வெண்கலச் சத்தமிடுகிற அதன்
கிளையடியில் நிற்கிறேன் நான்

துருவிய தேங்காயைச் சிந்தியதாய்
தும்பைப் பூக்கள் உதிர்ந்த வழித்தடத்தில்
வருகிறாய் நீ

நெல்லின் மணிகளை நெய்ததாய்
இணுக்கிச் செய்த சங்கிலி மின்னாப்பை
விஞ்சுகிறதுன் கள்ளாளச் சிரிப்பு

தட்டான்கள் திரியும் பருவத்தில்
தோன்றும் வயல் வாசனைக் காற்று
தொட்டுத் தொட்டுப் போகிறது
உன்னையும் என்னையும்

மிகக் கிட்டத்தில் விலகி நடக்கையில்
உச்சியில் ஓராயிரம் தவளைகள்
கெத்கெத்தென்கின்றன

ஒரேயொரு ஆவாரம் பூங்கொத்தை
கையளித்து விடலாம் எனினும்
மிரண்ட காளையின் கழுத்து மணியாய்
கலகலக்கிறது மனசு

ஊதாப் பூக்கள் படர்ந்த உன் முற்றத்தில்
நெருஞ்சி மஞ்சளும் விரவியதைப் போல
தைக்கிறது காதலின் துயரம்

உறக்கத்தில் கருவமரத்திலிருந்து
தவறி விழுகிற கரட்டானாய்
கனவின் உச்சாணிக் கொம்பு முறிந்து
அலறி விழுந்து கொண்டிருக்கிறேன்

நீ கையேந்தித் தாங்கிக்கொள்ள
வருவாயோ மாட்டாயோ ?

வே.ராமசாமி

No comments: