புளியமரப் பொழுதின் பகல் ஞாபகங்களின்
நிழல் நடுவே மின்னுகிறது தங்க வெயில்
எல்லாக் காலத்திலும் பறவைகள்
வெண்கலச் சத்தமிடுகிற அதன்
கிளையடியில் நிற்கிறேன் நான்
துருவிய தேங்காயைச் சிந்தியதாய்
தும்பைப் பூக்கள் உதிர்ந்த வழித்தடத்தில்
வருகிறாய் நீ
நெல்லின் மணிகளை நெய்ததாய்
இணுக்கிச் செய்த சங்கிலி மின்னாப்பை
விஞ்சுகிறதுன் கள்ளாளச் சிரிப்பு
தட்டான்கள் திரியும் பருவத்தில்
தோன்றும் வயல் வாசனைக் காற்று
தொட்டுத் தொட்டுப் போகிறது
உன்னையும் என்னையும்
மிகக் கிட்டத்தில் விலகி நடக்கையில்
உச்சியில் ஓராயிரம் தவளைகள்
கெத்கெத்தென்கின்றன
ஒரேயொரு ஆவாரம் பூங்கொத்தை
கையளித்து விடலாம் எனினும்
மிரண்ட காளையின் கழுத்து மணியாய்
கலகலக்கிறது மனசு
ஊதாப் பூக்கள் படர்ந்த உன் முற்றத்தில்
நெருஞ்சி மஞ்சளும் விரவியதைப் போல
தைக்கிறது காதலின் துயரம்
உறக்கத்தில் கருவமரத்திலிருந்து
தவறி விழுகிற கரட்டானாய்
கனவின் உச்சாணிக் கொம்பு முறிந்து
அலறி விழுந்து கொண்டிருக்கிறேன்
நீ கையேந்தித் தாங்கிக்கொள்ள
வருவாயோ மாட்டாயோ ?
வே.ராமசாமி
No comments:
Post a Comment