Sunday, April 18, 2010





காக்கைகளும் பிள்ளைகளும்

பிடிபடா பிரதி வேறுபாடு
கண்ணுக்குப் புலனாகும்
காக்கைக் கூட்டத்தில்

எருமைக் கொம்பில் நின்றதை
எறிந்து தள்ளியவனுக்கே
அன்றைய நாளின் மகுடத்தைச்
சூட்டுகின்றனர் தெருப்பிள்ளைகள்

கடலைப் பருப்பூன்றிய
செவக்காட்டுக்கும்
தானியங்கள் காய்கிற
தருணங்களுக்கும்
அகளை வீழ்த்துபவனே
அதிகாரியாகிறான்

தோதான கிளைதேடி
கவட்டை கண்டுபிடித்து
ரப்பர் இழுத்து
மண்டையில் தெறிப்பவர்களுக்கு
மனதில் நினைப்பு
மன்னாதி மன்னன்களாக

சோளக்கொல்லையில்
தொங்கவிடும் தேவைக்கு
எவரேனும் சொல்லிவிட்டாலோ
எமனின் கீரிடத்தை
எடுத்து மாட்டுகிறார்கள்
ஊரின் புத்திரர்கள்

கால்சட்டைப் பிராயத்தை
எட்டிப்பிடிக்காத
பொடியனுக்குமுண்டு
காகங்கொல்கிற கனவு

பெற்றவனழுது பின்தொடர
பிழைப்புக்கு இவர்கள்
பெருநகரம் போகிற
பின்னொரு பருவத்தில்

ஊரின் சுற்றுப்புறங்களில்
ஒலித்திருக்கும்
அவற்றின் குரல்கள்
எங்களுக்கிருப்பது
நிரந்தரக் கிளையென்று

******** ***********

மழைச் சகதியில்
யாரோ தவறவிட்ட
சிவப்பு கெட்ச்சைப்போல
ரத்தம் கக்கிச்
செத்தான் கவிஞன்

பிரேதப் பரிசோதனை
செய்துபார்த்த
மருத்துவர்கள் சொன்னார்கள்
அவன் நெஞ்சில்
புறக்கணிக்கப்பட்ட
கவிதையன்று
புற்றுக்கட்டி வளர்ந்திருந்தது

******** ***********

செம்புல நீர்

பூமியின் தேங்காய்க்குள்
குலுங்கிய செம்புல நீர்
புழுதிச் சாலைகளெல்லாம்
பூப்படைந்தன

புல்லின்
நெற்றிப்பொட்டிலும்
கள்ளிமுள்ளின்
கண்ணாம்பட்டையிலும்
எழுதப்பட்ட
ஒரே வண்ணம்

தென்னம் ஏணிப்படியில்
சில தப்படிகள் வர
ஏறித் தோற்ற நீரலை
பொன்புளியம்பூக்கள்
மரமிருக்க
தண்ணீர் தரையிருக்க
நிகழ்ந்ததொரு
மாயமகரந்தம்

கால்களுக்குக் கீழே
மண்ணரித்துச் செல்வதோ
செங்காட்டுத் தேவதைகளின்
உச்சிமுத்தம்

கரையின் வயிற்றில்
களவு செய்வது
முட்டிப் பால் குடிக்கும்
குட்டிகளின் வாஞ்சை

பந்துகளாகி மிதக்கும்
இலந்தைப் பழங்கள்
சிவப்பு ரத்தினக் கண்கள்

தொண்ட மிடறெடுத்து
விழுங்குதல்
என் அசுர வேட்கை

என்ன உலுக்கிய பின்தான்
இருக்கிறது
நெஞ்சின் மதகு திறந்து
வீறிட்டுப் பாய்கின்ற
வெள்ளமெல்லாம்

******** ***********

நொட்டாங்கை கருணை

வாழ்வோடு ஆழமாய்
வேர்பாவ முடியாமல்
போராடிப் போராடி
ஒரு தளிரெடுத்து
வைத்திருந்த அந்தச்
சின்னஞ் சிறு செடி

காப்பாற்றுகிறேன்
பேர்வழியென்று
மூன்றாம் மாடி மீதிருந்து
நீருற்றிய நும் கருணையில்
அதன்
குறையுயிரும் போன
ஐயன்மீர்
உச்சியடிந்து

******** ***********

தெற்கு

தெற்கு என்பது
திசைகளின் கணக்கில் வராது

கன்னிப் பூங் கொடி படர்ந்த
பொட்டல்புதர்களின் சூட்டச்
சூரியனும் தாங்காது

வேலி நெற்றுக்கள்
பிற நிலாக்களாய்ச்
சடத்த தேசம்
பொன்னளந்த பொழுதுகளை
ஊழியிலும் மறக்காது

சீமக் கருவேலமரத்தில்
சேர்ந்த நூலாம்படையிலும்
பார்த்தால்தான் தெரியும்
பனியின் நீர்மை

இமை முடிகள் நரத்தை
தாய்க்கிழவியின்
சொல்மொழிகளோ
கேள்வி கேட்கும்
பருவங்களை
நிறுத்திவைத்து

மலைகளைக் கொட்டிக்
கவிழ்த்தாலும் அடையாது
தென்பொருநையின்
ஊற்று நாவுகள்

பாட்டிலில் நதியும்
கொட்டிலில் திமிறும் கன்றும்
கிழிக்கத்தான் போகின்றன
கிழக்கின் திரைகளை

மோழ நெஞ்சங்களை
அறுத்தெறியக் கிளம்புகின்றன
கத்தாழக் கிழங்குகளின்
புதிய குத்துவாள்கள்

பாதித்தழைகள் காய்ந்து
மீதித் தழைகள் பொலிந்த
வேப்பமரத்தின் வீறு
புரியவே புரியாது
இந்தச் சொற்களில்
உங்களுக்கு

******** ***********
உறைப்பு

செம்மிளகாய்ச் சரங்கள்
காய்கின்ற முற்றத்தில்
அலகைக் கொத்தி
காரக் கெக்கெரிப்பில்
கிறுகிறுத்துச் சுற்றும்
செவலைக் கோழி

வாடிப்போன பூவின்
மகரந்தச் சூலில்
உறைப்புச் சுவை கண்டு
சுழித்துப் பறக்கும்
வண்ணத்துப் பூச்சி

அடுப்பிலே
குழலூதிக் குழலூதிக்
காந்திச் சிவந்து
கண்ணிமைகளும் தீயுமெனத்
தவிப்பாள் அம்மா

துரத்திய தேன்குளவி
புருவப்பட்டையில் கொட்டி
புடைக்க வைக்காதவரை
தேன்குளவியில் காரமிருப்பது
தெரியாது எனக்கு

கேப்பக் கூழ்
கரைத்து விட்டால்
உப்பு வத்தல் இல்லாமல்
ஒத்துழைக்க மறுக்கும்
நாவின் அரும்புகள்

பழைய சோற்றுக்கும்
பச்சை மிளகாய்க்கும்
இருப்பதுபோல்
பண்டப் பொருத்தம்
வராது வேறெதற்கும்

விதவிதமாய் எத்தனையோ
ருசிபேதம் இருந்தாலும்
உறைப்புக்கு ஒரே பழம்
இனிப்புக்கு மட்டமேனோ
பழங்கள் நூறு

விட கேட்டுப்போனால்
சொல்லவில்லை
வெட்டரிவாள் ஏந்திய
சுடலைமாடன்

அவன் பாவம்
எவ்வளவு காரந்தான்
சாப்பிட்டானோ
நாக்கத் தொங்கப்போட்டு
எனக்கேம் தெரியாதென்று
வெறித்திருக்கிறான் வெளிய

- வே.ராமசாமி

Saturday, April 17, 2010

‘வலி’ தருகின்ற வலி

‘வலி’ தருகின்ற வலி

வே. இராமசாமி

ஈழத் தமிழ் அகதிகளின் சோகங்களை முன்வைத்து வெளிவந்திருக்கிறது கவிஞர் அறிவுமதியின் ‘வலி’ கவிதைத் தொகுப்பு. இந்த நூலை நம் கையில் வாங்கும் போது ரத்தம் சொட்டுகின்ற ஒரு ஈரக்குலை துடிப்பது போலுள்ளது. மீனை / அரியும்போது / கிடைத்தது / குழந்தையின் / கண் என்கிற முதல் கவிதையே நம் நெஞ்சை உலுக்குகிறது. மீனை அரிந்து கொண்டிருக்கும் கையில் மீன்தானே கிடைக்க வேண்டும். கண் எங்கிருந்து வந்தது? அதுவும் குழந்தையின் கண் குழந்தையிலும் தமிழ்க் குழந்தையின் கண். இன வெறியர்களால் தோண்டி கடலில் வீசப்பட்டகண். எவ்வாறு இதனை தாங்கிக் கொள்வது? இந்தக் கவிதையின் அதிர்வுகள் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னே போய் புறநானூற்றுப் பாடல் காட்சியில் முட்டுகிறது.

‘தண்புனல் பரந்த மண்மறுத்துமீனின் செறுக்கும்’ - இந்த வரிகள் கருங்கழல் ஆதனார் என்ற புலவரால் பாடப்பட்டுள்ளது. சோழன் கரிகால் பெருவளத்தான் நாட்டுச் செழிப்பைச் சொல்வது. வாய்க்காலில் ஓடிவருகிற தண்ணீர் உடைந்து விடுகிறது. ஒரு கை மண்ணள்ளி அடைக்கிறது. அள்ளினால் மண் வரவில்லை மீன்கள் வருகின்றன. மீன்கள் உடைப்பை அடைக்கின்றன. இன்று கண் வருகிறது. ஈழத் தமிழர்களின் வாழ்வு அவலத்தின் விளிம்பில் நிற்கிறது. நாம் வெட்கமில்லாமல் வேடிக்கை பார்க்கிறோம்.

படகில் / ஏறினோம் / படகுகளை / விற்று / இங்கே / வீடு / கிடைப்பதற்குள் / அங்கே / நாடு / கிடைத்துவிடும் / இராமேசு வரத்தில் / எல்லோரும் / குளித்துக் / கரையேறுகிறார்கள் / நாங்கள் / குதித்துக் / கரையேறுகிறோம். இந்தக் கவிதை வரிக ளெல்லாம் தமிழ் நெஞ்சங்களில் கணுக்கணுவாய் தெறிக்கின்றன. தாய்த்தமிழகம் தங்கள் சகோதரர்களை வரவேற்கும் லட்சணம் தெரிகிறது. வாடகைக்கு வீடு கேட்டதற்கு வீடு தராவிட்டாலும் பரவாயில்லை காவல் துறையைக் கூட்டி வந்து காட்டிக் கொடுக்கிற நவீனத் தமிழர்களின் முகத்தில் அறைகிறது. இங்கு அகதியாக வந்தவர்கள் படுகின்ற அவதிகளை இந்த நூல் முழுவதும் வேதனை பொங்கப் பதிவு செய்கிறார் அறிவுமதி. மேலும் வெறும் ஊமைச் சாட்சியாக - கையறு நிலையாக இந்தக் கவிதைகள் முடியும் போது சொந்த நாட்டில் - சொந்த வீட்டில் நாமும் அகதிகளாக ஆக்கப்பட்டோமோ என்றும் தோன்றுகிறது.

தமிழ்ப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இலங்கையில் நடக்கின்ற கர்ண கொடூரங்களைப் பல கவிதைகள் பேசுகின்றன. உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடைய ஒரு மழலையின் புகைப்படத்திற்கு அருகே பச்சிளங்குழந்தையை / உடல் நெடுக / இப்படி உளியால் / கொத்தியிருக்கிறார்களே / புத்தர் சிலைக்கு / முயற்சி செய்திருப்பார்களா / என்று கேட்கும் அறிவுமதி, சாலைபோடும் / பெரு வண்டியைப் / பார்த்ததும் / பதறிப்போய் / பதுங்குகின்றன / விளையாடிக் / கொண்டிருந்த / குழந்தைகள் / என்று அகதிமுகாமில் தான் கண்ட நேரடி அனுபவத்தை எழுதும்போது என்ன நடந்திருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. குழந்தைக்கு ரோடுரோலரும் பீரங்கி போல்தான் தெரிகிறது. இந்த இடத்தில் செஞ்சோலைச் சோகத்தைப் பற்றி கவிஞர் பச்சியப்பன் எழுதிய ‘வேட்டையாடப் படுவோம் / என்று தெரியாமலே / விளையாடிக் கொண்டிருக்கிறது / எனது குழந்தையும் / என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.

பொதுவாக ஒரு படைப்பாளி தன்னனுபவத்தில் தனக்கு நேர்ந்த வலியை முன்வைத்து எழுதும்போது கூசாமல் ‘சுயபரிதாபம்’ என்று சொல்லக்கூடியவர்கள் ஒரு இனத்தின் வேதனையை முன்வைத்து எழுதும்போது அப்படிச் சொல்லித் தப்பி விடமுடியாது. மருந்து பற்றி / படித்துக் / கொண் டிருக்கையில் / விழுந்தது மரணம் / ஆழிப் பேரலைகளும் / எங்கள் பெண்களை / வீடு புகுந்து / இழுத்துப்போய் / கொல்லத்தான் செய்தன / ஆனாலும்.... / என்று கேட்கும் அறிவுமதியின் கேள்விக்கு பதில் யாரிடமிருக்கிறது? இந்த மாதிரியான கவிதைகளில் கவிச்சுவை தேடித் திரிவதே ஒரு அபத்தமான விஷயம். வாளில் அழகைப் பார்க்காதே கூர்மையைப் பார் என்ற காசி ஆனந்தனின் கவிதையைப் போலத்தான் அறிவுமதியின் இந்தக் கவிதைத் தொகுப்பும்.

முகாமிற்கு / அருகில் உள்ள / பள்ளியிலிருந்து / கேட்கிறது / யாதும் ஊரே / யாவரும் கேளிர் / என்றொரு கவிதைக் குரல் ஒலிக்கிறது இந்நூலில். உண்மையில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வரிகளை பன்னாட்டுக் கம்பெனிகள் தான் தமிழனை விடச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளன போலும். இந்தியாவில் - தமிழகத்தில் - எந்தக் கிராமத்தில் போய்ப் பார்த்தாலும் விவசாயின் சவ ஊர்வலம் ஒன்று முக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் சிறப்புப் பொருளாதார மண்டலம் விதைக் கொட்டையைத் தவிர வேறு எல்லாவிதைகளையும் பறித்துக் கொள்ளும் - மலட்டு விதைக் கம்பெனிகள் குறித்தும் தமிழ்தேசியர்கள் தங்கள் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டுமென்று அறிவுமதியின் இந்த நூலை முன்வைத்து நாம் கேட்டுக் கொள்ள முடியும்.

தோழர் இரா. நல்லக்கண்ணு, பிஜீ திவில் - கரும்புத் தோட்டத்தில் தமிழ்ப் பெண்கள் பட்ட துயரத்தைப் பாடிய பாரதியின் பாடலோடு அறிவுமதியின் இந்த கவித் தொகுப்பை ஒப்பிட்டு வழங்கியுள்ள நெகிழ்வுரையோடும் காசி ஆனந்தனின் விறார்ந்த வலியுரையோடும், ‘நாட்டுக்காக உயிரை விடுவது உத்தமம். ஆனால் அந்த உயிரை விடுவதற்கும் ஒரு நாடு வேண்டுமல்லவா? என்கிற இயக்குநர் சீமானின் உயிருரை யோடும் எங்கள் தாய்க் கவிஞனின் வலியை முன்மொழிகிற பழநிபாரதியின் பின்னுரையோடும் வந்துள்ள இந்த நூல் தமிழர்கள் அனைவரின் நெஞ்சிலும் நிகழ்கால வரலாற்று வலியைப் பிரதிபலிக்கும் முகமாக அமைந்துள்ளது. ஈழத்தமிழ் அகதிகள் முகாமை நோக்கி நம் கவனத்தைக் குவிக்கிறது.


வலி
ஆசிரியர் : அறிவுமதி, வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17,விலை : ரூ. 70.00

Friday, April 16, 2010

செவக்காட்டுச் சித்திரங்கள்




செவக்காட்டுச் சித்திரங்கள்" src="http://books.dinamalar.com/admin/Bookimages/21330Sevakkattu-Chithirangal.jpg" style="border-width: 0px;">


பிடித்தவை


ஆசிரியர்: வே.இராம சாமி
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: பொது
ISBN எண்: 978-81-8476-128-3
மொத்த பார்வையாளர்கள்: 42 Views
விலை: ரூ. 45

விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

இன்றைய சூழலில், நகரத்தில் வாழும் மனிதன் பல துறைகளில் வசதி வாய்ப்புகள் பெற்று வளர்ச்சி அடைந்திருக்கிறான் என்ற போதிலும், கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதனின் வளர்ச்சி என்றுமே கேள்விக் குறிதான்!
மாறிவரும் காலமாற்றத்தால், கிராமங்களில் பழைய வீடுகள் இடிக்கப்பட்டு விண்ணை நோக்கி சொகுசு கட்டடங்கள் எழும்பி நிற்கின்றன. இறக்குமதி செய்யப்பட்ட அதிவிரைவு வாகனங்கள், வெளிநாட்டு உணவு வகைகள் என கிராமங்களும் தங்கள் இயல்பைத் தொலைத்து வருகின்றன. ஆனால், அங்கு வாழும் பகட்டு இல்லாத சாதாரண மக்களின் வாழ்க்கை, அந்த மண்ணில் தொடர்ந்து உழன்று கொண்டுதானிருக்கிறது.
அப்படிப்பட்ட வறட்சியான செம்மண் காட்டில், தான் சிறுவனாக இருந்தபோது வேப்பம் முத்து பொறுக்கி, பால்பவுடர் ருசித்ததையும், கோலிக்குண்டு உருட்டி, மல்லுக்கட்டி விளையாடியதையும், அம்மாவுக்குத் தெரியாமல் தோசையை எடுத்து முழுங்கும்போது தொண்டை அடைத்துக்கொண்டு தோசை முழுங்கி என்ற பட்டப் பெயர் பெற்றதையும், கணக்குப் பரீட்சை பேப்பர் முழுக்க மூக்காண்டி வாத்தியார் பட்டப் பேரை எழுதி அடிவாங்கியதையும் மண் வாசனை கெடாமல் எழுத்துச் சித்திரங்களாகத் தீட்டியுள்ளார் நூலாசிரியர் வே.இராமசாமி.
இந்த நூலைப் படிக்கப் படிக்க, நமது இளம் பிராயத்து சம்பவங்களும் நினைவுகளும் காட்சிகளாக விரிந்து அந்த செவக்காட்டுக்கே அழைத்துச் செல்வதை உணரமுடியும்.
கிராமத்துக்கே உரிய கிண்டலும் கேலியும் காதலும் ரோசமும் நூல் முழுக்க விரவிக்கிடக்கின்றன. இளவட்டக்கல் தூக்கும் முத்துக்காளை, மடை ஏறாம கிடக்கும் தண்ணியை இறைவெட்டிப் போட்டு இறைக்கும் மயில்சாமி, புழுதியில் பல்டியடித்துக் கிடந்த ராசேரிக் கோனார், தைலாங்கிழவி போன்ற பாத்திரப் படைப்புகள் ஓவியர் சேகரின் கோட்டோவியங்களில் உயிர் பெறுகின்றன.
நகரத்தில் உள்ளவர்கள் கிராமத்து வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதற்கும், கிராமத்தில் வாழ்பவர்கள் தங்கள் வாழ்வு கரைந்துகொண்டு வருவதை உணர்ந்துகொள்வதற்கும் இந்த நூல் ஒரு காலக்கண்ணாடி.

Monday, April 12, 2010

நூல் விமர்சனம்

தெக்கிக் கொல்லையும் காதறுந்த ஆடும் வே. இராமசாமி

இன்னும் வேறென்ன கேடு வேண்டும் என்று கேட்கிற அளவுக்கு விவசாயம் சீரழிந்து விட்டது. எப்படித் தாய்மொழி தெரியாத தலைமுறை ஒன்று தமிழ்நாட்டில் உருவாகி உள்ளதோ, அதைப்போலவே விவசாயத்தை மேற்கொள்ளாத ஒரு தலைமுறையும் இங்கு உருவாகிவிட்டது. இச்சூழ்நிலையில் மண் சார்ந்த - உழவு சார்ந்த வாழ்வியலின் அவலங்களை, பெருமிதங்களை, பதிவுகளைத் தொடர்ந்து எழுதிவரக்கூடிய கவிஞர்களுள் சிவராஜ் வெகு முக்கியமானவர். அவரது சமீபத்திய நெக்குருகச் செய்யும் கவிதைத் தொகுப்பு “நிலமிசை”.நிலமிசையில் விதைமுளைக்கும். ஆனால் இவரது கவிதைகளில் நிலமே விதையாக முளைத்துள்ளது. குழந்தையின் பனிப்படலங்கள் போன்ற கண்களினூடே உருவங்கள் சரியாகப் பதியாத போதே நிலம் நெஞ்சில் படிந்து விடுகிறது. ஏனெனில் விவசாயி வீட்டுப் பிள்ளைகளின் தொட்டில் வீட்டில் ஆடியதை விட காட்டிலாடியதே அதிகமாக இருக்கும். சிவராஜிக்கும் அவரது தெக்கிக் கொல்லை அப்படித்தான் போலும். வளர்ந்து தன்னந்தனியாக தனது கன்னி உழவை நிலத்தில் நிகழ்த்தும் போது கிராதி கிராதியாய் அது பெயர்ந்திருக்கிறது. அந்தத் துண்டுகளை - உழவுக் கட்டிகளை வார்த்தையில் வைத்து தெக்கிக் கொல்லை என்ற கவிதையில் நம்மை நெகிழ வைக்கிறார்.ஐப்பசி மழையில் / கொடி அழுகி / கடல மொளச்சுப் போனாலும் / கம்பு எங்களுக்கு / கஞ்சி ஊத்தியிருக்கு. இந்தக் கவிதை வரிகளில் பசுமைப் புரட்சிக்கு முந்தியிருந்த பயிர்த் தொழில்நுட்பமொன்று பதிவாகியுள்ளது. நிலத்தில் - வீட்டில் எப்போதும் உணவுப் பயிர் ஒன்று இருக்கும். ஒன்றில்லா விட்டால் ஒன்று வவுத்துப் பசி போக்கும். உணர்வு பூர்வமாகச் செய்தார்களோ இல்லையோ உணவுப் பயிர் எல்லாக் காலங்களிலும் மகசூலில் இருக்கும். இப்போது எல்லாம் முடிந்த காலத்தில் ஏழைகளுக்கு ரெண்டு ஏக்கர் தரப் போகிறார்களாம் நல்லது. ஏற்கனவே உள்ள பூமியில் விவசாயம் நன்முறையில் நடக்க வழியில்லையே என்ற கேள்விக்கு விடையில்லை. உழவன் சாகவேண்டுமெனில் பூச்சிமருந்து குடிக்கவேண்டாம்; பருத்தி பயிரிட்டால் போதும் என்ற நிலை இன்றுள்ளது. இம்மாதிரியான பிரச்சினைகளைப் பேசுதலே மண் சார்ந்த கவிதைகளின் அடுத்த கட்டமாக இருக்க முடியும். வெறும் பதிவுகளை வைத்து மாரடிப்பதை இனி விடவேண்டும்.‘வரவுத்திருவை’ பற்றிய விரிவான கவிதையொன்று இந்த ‘நிலமிசை’த் தொகுப்பை அணி செய்கிறது. உமிய தள்ளிவிட்டு / பீராஞ்சு பொடச்சு / கல அரிசி அளந்தாக்க / படி அரிசி கிடைக்கும் / பகல் பொழுது ஓடும் / சுழலும் திருவைப்போல் / இவ்வரிகளைப் படிக்கும் போதே வாசகன் தலையில் கரகரவெனத் திருவைச் சுற்றுகிற பிரேமை தட்டிவிடும். அந்த அளவுக்கு அச்சு அசலாக அமைந்துள்ளது. அணிந்துரையில் பழநிபாரதி திருவையைப் பற்றி இதுவரை யாரும் எழுதவில்லை என்று பாராட்டிச் சொல்லியுள்ளார்.அதைப்போலவே ‘விடிவிளக்கு’என்கிற கவிதை நம் கவனத்தைக் கவர்கிறது. இதில் கவிஞர் சிவராஜ் முந்திரிக் கொட்டை பொறுக்கும் பெண்ணின் பாடுகளை வருணித்துள்ளார். காலில்தைத்த / காரமுள்ளின் வலி / செருப்பாய் ஆகும் / குளவி கொட்டி / கண்ணு வீங்கியிருக்கும் / முந்திரிப்பால் / பட்டயிடமெல்லாம் / வெந்து போயிருக்கும் - இவ்வளவு துன்பங்களோடு வீட்டிற்கு வந்தவள் பிள்ளைக்கு வெட்டி வெட்டி இழுக்கும்.அவ்வேளையில் அவளின் நிலையை “இரவெல்லாம் / இவளும் எரிவாள் / விளக்கோடு” என்று கவித்துவம் ததும்ப படம் பிடிக்கிறார் நூலாசிரியர்.‘செவலையெனும் சித்தப்பா’என்ற இத்தொகுப்பிலுள்ள கவிதை முத்தாய்ப்பாக உள்ளது. ஆநிரைகளை விட்டுவிட்டு உழவனின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாது. அது நடந்ததுயெல்லாம் / நேர் கோடாக்கினால் / ஆசியாக் கண்டத்தையே / அளந்து வந்திருக்கும் / பொய்ய வயக்காட்டில் / இடுப்பு மட்டும் சேற்றிலே / தவழ்ந்து கொண்டு வரும் பொழுது / செவலையைப் பார்க்க / பாவமாக இருக்கும் / அன்னிக்கு அதுக்கு / புண்ணாக்கு கிடைக்கும் / அப்பா போனதுக்கப்புறம் / செவலைதான் / எங்களுக்குச் சோறு போட்டுச்சு / எங்களை விட்டுப் பிரிந்த / செவலை செத்துப் போனாலும் / எந்தத் தப்பிலாவது / தவிலிலாவது / அழுது கொண்டுதான் இருக்கும் / எங்களைப் போல... இந்தக் கவிதை முடியும் இடத்தில் நமக்குக் கண்ணீர்த்துளி தொடங்கிவிடும். நல்ல கவிதைகள் அழவைக்கும். ஒரு நாள் எழவைக்கும். அந்தச் சக்தி சிவராஜின் கவிதைக்கு இருக்கிறது.மொத்தத்தில் இக்கவிதைத் தொகுப்பு உண்மையைப் பேசுகிறது. கவிதைக்கும் கவிஞனின் வாழ்க்கைக்கும் தொடர்புள்ளது. காதல் என்றும் புரட்சி என்றும் அம்மையின் மேன்மை என்றும் இது கொட்டி முழக்கவில்லை. தன்னைத் தானே மேம்படுத்தி - சிறப்புரைத்து - இது பொய்யுரைக்கவில்லை. எழுதியபடியே வாழ்கிறான் ‘நிலமிசை’யில் இக்கவிஞன். தமிழ்நாட்டில் எழுதியபடியே கவிஞன் வாழ்கிறானென்றால் அது அரிதல்லவா? முன்னுரையில் அவரே சொல்வதுபோல் படித்தது மறந்துவிடும். பட்டபாடு மறக்க முடியாது.நிலமிசைஆசிரியர் : சிவராஜ்,வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்,142, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை,சென்னை - 14, விலை : ரூ. 45.00.

கவிதைகள்

புறா வாழ்வு

எச்சங்களால்
அறியப்படும்
அதன் இருப்பிடம்
சிறுபிள்ளைகளும்
கல்லெறியும் படியானது

பழைய சோற்றை
கிணற்றுள் வீசும்
சிறுசப்தத்திற்கும்
அஞ்சிப் பறக்கும்
அவற்றின் பதற்றம்
எவ்வுயிரும் அறியாதது

முட்டைகளை
நீரில் தவறவிட்டு
மலங்க மலங்க
மின்கம்பத்தில் முழிக்கும்
நாள் முழுதும்

பொரித்ததானாலும்...
கிணற்றின் இடுப்பில்
கிளைத்த மஞ்சனத்திக்கு
தீயிடும் போதோ
உள்விழுந்த தென்னோலைகளை
அகற்றுகையிலோ
அப்பாவின் கண்பட்டு
குழம்புக்கு வரும்
குஞ்சுகள்

மறுநாள்
தாய்ப்புறாக்களின்
கேவலில் நிறையும்
கிணறு-
வே. ராமசாமி

மழைக்குறிப்பு

சிலசமயங்களில்
மழையென்று
சரியாக ஏமாற்றிவிடுகிறது
தென்னையின்
கீற்றுச் சலசலப்பு

சன்னலை
எதற்காகத் திறக்கிறார்கள்
மழை ரசிக்கவா
ஊர்ஜிதப்படுத்தவா?

கிழிசலில்லாத
குடையிருப்பவர்களுக்கு
பெருமைக்குரிய
மழைப்பயணம் வாய்க்கலாம்

பெருங்குரலெடுத்து
மழை பொழிகையில்
பட்டாம் பூச்சிகள்-எங்கு
பதுங்கி இருக்கும்?

மழைக்கான நிகழ்வு
சாத்தியப்படுகிற
இதே பூமியில்தான்
அணுகுண்டுகளைப்
பதுக்கி வைத்திருக்கிறார்கள்

இந்த வருட மழையனுபவம்
புதிதாகக் குழந்தை பெற்ற
அக்காவுக்கு எப்படி இருக்கும்?

அமிருதவருசினி வாசிக்க
அவிழ்கிறது மேகமென்றால்
மழைப்பாடல் எந்த
ராகத்தில் நிகழும்?

துருவிப் துருவிப்
பார்த்தாலும்
இருளில் பெய்த மழையின்
ஒரு துளியும்
கண்ணில் படவில்லை
- வே. ராமசாமி

இலைப் பிரகடனம்

முன்னதாக
இலை
கடலாகியிருக்க வேண்டியது

வானின் இடத்தில்
வந்திருக்க வேண்டியதும்
அதுவே

ஒருமலை போல்
விம்மிப் புடைக்க
இயற்கை
பச்சை இலையைத்தான்
தேர்வு செய்திருக்கும்

நதியெனக் கிளம்பிய
இலையொன்று
ஆதிநாளில்
ஸ்தம்பித்து திகைத்த போது
முதுகினடியில்
நரம்பு ரேகைகளைப்
பெற்றுக் கொண்டது

புளிச்சிக் கீரைகள்
தலைவிரித்த
தோட்டத்தினுள் நின்று
அறிவிக்கிறேன்
இலைகளே வானம்

முன்னாளில்
ஆத்தா-என்
தலையில்பேன் பார்த்த போது
விரல்களாய் நீண்டன
இலைகள்

முன்னத்தங்கால்
கிளை போட்டு
பின்னத்தங்கால்
தரையூன்றி
அவ்
வெள்ளாடு குடிப்பது
இலைகளின்
முலைப்பால்

இந்த
அலைவீசும் வாழ்வில்
இப்படி இலைகளில்
ஏறிக் கொண்டுதான்
அவ்வப்போது
தப்பிக் கொண்டிருக்கிறேன்

II

இலைகள்
என்னை
லேசில் விடுவதாயில்லை

கனவில்
நுழைந்து விட்டன

அழகிய நடிகையென
தன் ரூபங்களை
காட்டி மயக்கின

ஓரிலையில்
கோடிப்பக்கங்கள் உள்ள
புத்தகம்ஒன்ற
புதைந்திருந்தது

எனது
நரம்பெல்லாம்
இலைகள்அரும்பின

விடியலில்
என்னுடல்
கொடியாகி இருந்தது

இடையன்
தன் ஆடுகளுக்கு
என்னை
கட்டுவானாக
- வே. ராமசாமி

வேர் பூத்த கவிதை


உடம்பில்
சில கவிதைகள்
ஒட்டிக்கொண்டுள்ளன
ஒட்டுப்புல் போல

கண்
காது
மூக்கு
கால்
வயிறு என
ஆங்காங்கே
சில பாடல்கள்
பதிவாயுள்ளன

எங்கே தொட்டாலும்
கவிதைகள் தங்களை
வாசிக்க ஆரம்பித்துவிடும்

பாடல்களை
தங்களை முழங்க
ஆரம்பித்துவிடும்

கனவிலும் உறங்காமல்
உற்பத்தியான
கவிதையொன்று
மூளையில் கிளைத்துச்
செழித்தது

நெடுநாளாக
ஊறிக்கிடந்த
வரிகள் வேர்பிடித்து
குடல் பின்னியிறுக்கியதில்
வெளித்தள்ளி தொங்கியது
நாக்கு

அதன்
மேலும் கீழும்
அச்சாகியிருந்தன
சில-

ராமசாமி வே.


மழை வேட்டல் II

கடைசியில்
மழைபெய்தே விட்டது

வேப்பமரத்தின்
கிளைவரை
பெருகியது நீர்

பேராசை கொண்ட
மரம்
கிளைநுனியில்
தண்ணீர் குடிக்கிறது

பஞ்சிட்டானின் சிறகு
மாதமொன்றாகியும்
உலரவில்லை

சிறகு கோதியே
களைத்தன
புள்ளினங்கள்

வொவ்வொரு
சொட்டையும் விடாமல்
பருகினவென் கண்கள்

மழைநீரில்
காகிதக் கப்பலென
கிளம்பி விட்டன
அவை

குளத்தில் மிதக்கிறது
என் சடலம்

பிணத்தை
விரைவில்
அப்புறப்படுத்தாவிடில்
நான்
குளத்தைத் தூர்த்துவிடுவேன்

- வே. ராமசாமி

சிறகு

முன்னம் ஒருநாள்
காதலின் வானம் விலாவில் முளைத்தது
சிறகில் பயிர் செய்தோம்
வண்ணமயமான பூக்களை

றெக்கைகளின் நரம்புத்தடத்தில்
வேர்பிடித்துக் கிடந்தது ஆன்மம்

தாவரங்கள் பற்றிய விசாரணையின்
அடிவாரத்தில் பதுங்கிச் செழித்தது காதல்

சிறகுகளின் பெருமிதத்தில்
வாழ்வின் முனைகளின் குடைசாய்ந்து
கிடந்தேன்

இவனுக்கேன் இம்மாம் பெரிய சிறகுகள்
என
காதலை முறித்துப்போட்டார்கள்.

நானுங்கூட
அறத்தின் நீள அகல உயர விழுமியங்களில்
சிறகுகளைப் பொருத்திச் செதுக்கினேன்

இப்போது
காதல் உதிர்ந்துவிட்டது

உதறமுடியாத பெருங்கனத்துடன்
படர்ந்துகிடக்கிறது சிறகு.

- வே. ராமசாமி

பிடிமானம்

அற்புதங்களின்
பிடிமானத்தோடு கொஞ்சம்
சமாதானமாய்க் கழிகிறது
காலம்

கருவேலமரப் பிசினாய்
ஏதாவதொன்றுடன்
ஒட்ட வேண்டியிருக்கிறது

இறுகப் பற்றினாலும்
தோள் துண்டெடுத்து
உதறிவிட்டுப் போனாலும்
நிகழ்ந்துவிடும்
அபாயம் மிக்க பிரிவு

ஓணானின்
ஆராயுங் கள்ளத்துடன்
வொவ்வொன்றிலும்
தலைநீட்டிப் பார்க்க
வேண்டாம்தான்

ஆனால்
விதவிதமான கண்ணிகளோடு
திரிகிறவர்களை
என்ன செய்வது?

எவனும் எவன் கழுத்திலும்
சுருக்கு மாட்டலாமென்ற
அச்சத்தில் இறுக்கிக் கொள்கிறார்கள்
அவரவர் சங்குகளை

ஒரு சிறுகுழந்தை
பிறிதோர் குழந்தைக்கு வழங்கும்
முகாந்திரமற்ற
முத்தச்சுவையுடன்
ஒருத்தரையும்
அன்பு செய்ய முடிவதில்லை

- வே. ராமசாமி

வாழ்வறு நிலை

மனதின்
சல்லி வேர்களில்
விழுந்து கொண்டேயிருக்கும்
நிகழ்வுகளின் கோடரி

கனவுப் பொதியில்
தீப்பற்றியெரிய
கேட்பாரற்றுக் கூச்சலிடும்
ஆன்மா

பசிவாடை வீசும்
நகரத் தெருக்களில்
அலைந்த கால்களில்
பிசுபிசுக்கும் நிராகரிப்பு

துயர வெளிகளில்
நைந்து நைந்து
துளிர்விடத் தயங்கும்
நம்பிக்கை

திசைகளெங்கும்
அறைவாங்கி
துடித்துவிழும்
உயிர்ப்பறவை

இக்கவிதையே
பற்றுக் கோடானால்
கழியுமோ
பிறவிப் பெருங்கடல்

முளைக்குமோ கருகுமோ
பாலை மணலில்
புதைந்த விதையாய்
கிடக்கும் வாழ்வு

- வே. ராமசாமி

மழை வேட்டல்

நின் உதடு
பெரிது

பிரபஞ்சம் முழுவதும்
முத்தமிட ஏதுவானது

இங்கே
விசும்பும் கணம் நோக்கி
வேர்முடிச்சுகளில்
கண்ணீர் வாங்கி
புழுங்கி அழுகிறது நிலம்

வெப்பங்குடித்து
மேனி சுருங்கி
கிழவியாயின தாவர இலைகள்

நீர் வேட்கையில்
வியர்வைத்துவாரம் அடைந்து
நாற்றமெடுக்கிறது
மனிதர் குருதி

தகிக்கும் கதிரொளியில்
உன் நீர்மைத் துளிகளைக் கண்ணுற்று
கழுத்தை நெரித்து பெய்யச் சொல்ல
இயலாத நான் -

வாடிய புளியமரத்தடியில்
ஈரத்துணியாய் என்னை
கசக்கிப் பிழியுமுன்

நீ
பொழி
பேரோலமெடுத்து
முத்தமிடு!-

வே. ராமசாமி

நெருஞ்சிச்சாமி

மாவுருண்டைக்குப்
பேர் போனது
வடக்கத்தி அம்மன்

மாவில்
கண் வைத்து
அருள் கொண்டாடுகிறார்
நமது
சாராயங்குடித்த
சாமியார்

ஆடிய ஆட்டத்தில்
நெருஞ்சிமுள்ளில்
தவ்விக்
குதித்தும் விட்டார்

பின்பு
ஆவேசம் போன
இடந்தெரியாமல்
உள்ளங்கால்களை
தரையில் தேய்த்து
ஆடி மேற்செல்கிறார்

- வே. ராமசாமி

மலையாங்குளம் 1


தவளைகளைப்
பெய்கிற மழை

கொக்குகள்
காய்க்கிற மரம்

சாரைகள்
கண்ணுறங்கும்
நெடுவயல்

தானியம்
நிறைந்த குதிர்

தோள் தூக்கிச்
சுமக்கும்
தாய்மாமன்

காசுதருகிற
அத்தை

தாயமிடும்
அவள் மகள்

தம்பியின்
ஈரக்காலில் இறங்கிய
கருவமுள்ளை
கிளறியெடுக்கிற
அக்கா

ஊர்தாங்கி
நிற்கிற ஆல்

கரிந்து திமிர்ந்து
மேற்பார்வைசெய்யும்
பனைகள்

கைகாட்டி
முன்னேகும்
வரிசைப்
புளியமரங்கள்

வாழைத் தோப்பின்
இலை விரிந்து
மூடிய வானம்

தரைக்கு
ஒருசாண் மேலே
நேர்க்கோட்டில் பறந்து
ஈசலை
இரையெடுக்கும்
தைலான்

தானியம்
உடைத்து உடைத்து
பூமி சுற்றாவிட்டாலும்
தான் சுற்றும்
திருவைக்கல்

வடக்கே
வாழவந்த அம்மன்

தெற்கே
ஆனைக்காரன்

மேற்கே
கூடாரத்தம்மா

கிழக்கே
உச்சி உடையார்

நாலுபுறமும்
குளங்கள் சூழ்ந்தாலும்
ஒன்றின் பெயர்
ஊருக்கானது
மலையாங்குளம்

வே. ராமசாமி
-

மலையாங்குளம் 2

எருக்கிலையும்
இலந்தையும்தவிர
எல்லாமிழந்தது
பூமி

தீனியில்லாத
சினைப்பசுவொன்று
குப்பையில்
ஊதிச் செத்தது

ஊர்
காக்கிற அம்மன்
கட்டமன் ஆனாள்

ஆல்
தங்காத ஊரில்
அருகம்புல்
தங்குமா?

பனை
தங்காத ஊரில்
பச்ச நெல்லு
தங்குமா?

சொலவடை
சொல்கிற
பெருசுகள் மனசு
கூமுட்டையென
கலங்கிக் கிடக்கும்
பிள்ளைகள்
வாழ்வு நினைத்து

அபலை
கண்ணென
மஞ்சள் பூத்தது
வெள்ளாட்டின் கண்

முன்னோர்
ஆத்மா வாழும்
பெருமரங்கள்
மொட்டையாகின

ஊரில் பாதி
கிரையமானது
ஜெயவிலாஸ் மில்லுக்கும்
ஈரோட்டுக்காரனுக்கும்

உச்சந்தலை
ஊன்றி நின்றாலும்
தலை நனையாத
கிணறுகள் காய

தரைதளிர்த்துக்
கிடக்கின்றன
பரம்பரை நிலங்கள்

எலிப்பொந்தில்
இறங்கிய நீரென
புகுந்த வறுமையில்
திசைக் கொருவராக
தெறித்தோடினர்
வாரிசுகள்

பழகிய காடுகளில்
ஆவிவெந்து
அலைகிறார்கள்
அன்னைமார்கள்

- வே. ராமசாமி

நதியாடல்

உதட்டு முத்தம் பட்டு
நழுவியோடுகிற தேவதையின்
வண்ணம் நீலம்

அவளின்
உள்ளிறங்கி நீராடும்
என் தலைமீது செல்லும்
மாநதி

நடந்து வந்த பாலை
தெப்பமாகித் தெவங்கும்
இவ் ஒட்டகம்

வெங்காட்டின்
சிறு பறவைக்கு
நீர்ச்சுனை
இடதில் ஒரு சிறகு
வலதில் ஒரு சிறகு

குழி நீரில்
குளித்த கருங்காகம்
சமுத்திரத்தின் கிளையில்
கட்டியது கூடு

நரம்புகள் தோறும்
நதிகள் ஊறி
திசைகள் குழம்பி
மோதித் தெறிக்கிறது
துளி

வான் மட்டும் மேவி
மேலும் பரவும் தண்ணீர்

இப்போது
பிரபஞ்ச நீர்மத்தில் மிதக்கிற
நிலா நான்.

- வே. ராமசாமி
ஏன்

சில முகங்களை
கண்டவுடன்
எரிச்சல் வருகிறது

அம்மா
பார்த்து வைத்திருக்கிற
பெண்னெனில்
அறவே பிடிப்பதில்லை

பட்டணம் வாத்தியாரின்
மேசையிலுள்ள
பூமி உருண்டையை
ரெண்டா
உடைக்கத் தோன்றும்

அதுவும் குறிப்பாகத்
தேங்காய்மாதிரி

இப்படியாப்பட்ட
எண்ணங்கள்
எங்கிருந்து
வருகின்றன

ஏன்
வருகின்றன?-

வே. ராமசாமி

நூற்றாண்டுத் தாகம்

நீங்கள் நீரில்
உழவு செயபவர்கள்

நதிப்புனலில்
சவப்பெட்டி தயாரித்தே
பழக்கப்பட்டவர்கள்

சம்சாரிகளின்
கால் வெடிப்பாய்
ஆறுகிடந்தபோது
உங்களில் ஒருவனையும்
காணவில்லை

பச்சை ஆட்டுப்புழுக்கை
இரும்பாய்க் காய்ந்த கோடையில்
துளி நீரில்லை எமக்கு

முழுதாய் குடல் நனைய
வழியின்றி அலறும்
பசுவின் குரல் கேட்டதில்லை
உம் காதுகள்

எம் ஆத்தாக்கள்
அலற அலற
சொசைட்டிக் கடன்கேட்டு
கதவு உடைத்த
நீங்கள் கூப்பிட்டா
புறப்பட்டது நதி

உம் உள்ளங்கையில்
ஒரு போதுமில்லை
மேக அயனிகள்

நதி திரட்டி வந்தது
மழைத்தாய் மட்டும்

பின்னொரு நாளில்
கசியாமல் நீர்தேக்க
பெருந்தன்மையுடன்
திறந்து கொள்ளும்
மதகுகள் மேவி
புரளும் வெள்ளத்தில்
தீருவதில்லை
எம்நூற்றாண்டுத் தாகம்.

- வே. ராமசாமி

பம்பரம்

ஒருபோதும்
பேருந்துப் பயணம் செய்ய
வாய்ப்பேயில்லாத
கலைவாணன் பயல்
ஆணி மினுமினுங்கும்
பம்பரத்தை
மல்லாக்க வைக்கிறான்
கோயில்பட்டி ரோட்டில்

- வே. ராமசாமி

வண்ணத்துப் பூச்சிகள் துரத்த ஓடியவன்

கொலைக்கரங்கள்
வாய்த்த பால்யம்
எனது

செவக்காட்டில் மூச்சுமுட்ட
அம்மா புடுங்கி வந்த
புளியங்குறண்டியால்
பட்டாம்பூச்சிக்குக் குறிவைப்பேன்

ஏதேனும்
துத்திப்பூவில் தேனுறிஞ்சுவதை
பதுங்கிச் சென்று அறைகையில்
மெளனஓலமிட்டுச் சரியும்

துண்டிக்கப்பட்ட பல்லிவாயாய்
துடிதுடிக்கும் அதன் சிறகு பிய்த்து
மீண்டும் முளைக்குமோவென
கடாப் பெட்டியிலடைக்க
எறும்புகள் மொய்த்துச்
செத்துக்கிடக்கும் மறுநாள்

மூணுவேளைச் சோற்றுக்கென
வேதப்பள்ளியில் சேர்க்கப்படும்வரை
வெள்ளை மஞ்சள் சிவப்பு என
அவற்றின் பின்னால்தான்
அலைந்து கொண்டிருந்தேன்

அப்புறம்தான்
ஓடவேண்டியதாயிற்று
எதிர்ப்படும் நிறங்களிலிருந்து
உயிர்த்தெழும் வண்ணத்துப் பூச்சிகள்
துரத்தத் துரத்த

.- வே. ராமசாமி



உன் அம்மாவின் உபாயங்கள்

வருகிற
விடுமுறை தினத்தில்
ஊன்றவிருக்கும் புதிய செடிகள் பற்றி
கூறுகையில்
கருப்பட்டி தின்ன நாயாய்க்
குமைகிறாய்

கோரைப்புற்களை
எருமைகள் மேயும்
பிரதேசத்திலிருந்து வந்தவனிடம்
பால்சம் ஏஞ்சல் அரேலியோ என
இங்கிலீஸ் பூக்களாய்
பட்டியலிடுகிறாய்

நான்
மகிழிக் கீரையின்
கூம்பு வடிவிலான வெண்மலரை
எடுத்துரைக்க
பெருமிதம் நொறுங்கித் தவிக்கிறாய்

ரம்பங்களால் அறுபட்டு
டமாரெனச் சரியும்
மரங்களுக்காவும்
புற்களின் சிரசுகள்
முறிபடுவதற்காகவும்
ஆழ்ந்த துயரங்களை
சமர்ப்பிக்கிறாய்

மேலும்
மிக முக்கியமாக
அறியாமல் விட்டிருக்கிறாய்
என்னை
ஆள்வைத்து நையப்புடைத்தல்
காவல்துறையிடம் புகார் செய்தல்
வேலையைவிட்டு நீக்குதல்
முதலான
உன் அம்மாவின் உபாயங்களை

- வே. ராமசாமி

சேலை

இலவசச் சீலைன்னு
இளிச்சுட்டுப் போனாக்க
மட்டித் துணியொன்ன
மடியில் கட்டிட்டான்

ஒருநா உடுத்திட்டு
ஊற வெச்சாக்க
ஊதா போனதய்யா
UNMAI THRINCHATHAIYA

பஞ்சிட்டு நெஞ்சாகளா
முள்ளுட்டு தச்சாகளா
உசிர அரிக்குதய்யா
எரிச்சல் எடுக்குதய்யா

மாருச்சீலைன்னு
மக்கள் நெனச்சாக்க
வரிச்சீலை தானென்று
உருண்டு திரண்டதய்யா

ரேசங்கடைக்காரன்
புடுங்குன பத்துக்கும்
பெறுமானம் இல்லைய்யா
பெற்ற பொருளய்யா

மாத்துஉடை கேட்டு
மனசு தவிக்கையிலே
இனாஞ் சேலையிலும்
எஞ்சோகம் தீரலையே

சீலைப் பேனுங்கசீ
வனக் குடிக்கும்படி
சீலையில்லா தந்திருக்காக
சீமையில இல்லாத சீல

ஒருமுந்தி உடம்புல
மறுமுந்தி மரத்துல
உடுப்புக்கு ஒத்தச்சீல –
என்இடுப்புக்கு ஏதுமில்ல-

வே. ராமசாமி

மிருகக்காட்சி சாலையில்

தனிமையின்
வெகு உள்ளிறங்கித்
துயின்றிருந்தது முள்ளம்பன்றி

தனது
நீர் வற்றிய கிணற்றினுள்
ஏதோ செய்யும்
உழவனின் பாவனையில்
அதன் லயிப்பு

முட்கள்
பெருமரங்களாகச் செழித்த
ஒரு கனவில்
மாமலை போன்ற கிழங்கைச்
சுகித்துக் கொண்டிருக்கும்
அதற்கு
சாலை ஊழியன்
இக்
காங்கிரீட் கிடங்கில்
வைத்துவிட்டுப் போன
முட்டைக்கோசு
எம்மாத்திரம்

ஈயத்தட்டில் சமுத்திரத்தை
நிரப்பி வைத்தாலுமென்ன

வெட்ட வெளியில்
நாக்கைச் சுழற்றி
பூர்வீக கானகத்தின்
சுனையை அது
பருகிக் கொள்ளும்

வேறு கூண்டு நோக்கி
துரிதப்படுத்தும்
காவலாளி சொல்கிறான்
உனது கண்களில்
முள்ளம்பன்றியின்
முட்கள் தைத்ததோவென

திடுக்கிட்டு
நகரும் கால்களை
வரவேற்று நிற்கும்
புலியின் தனிமை
---------------



ஆனைபோல்
உசரமிருந்தாலும்
வரப்பேற முடியாது
நெல்லறுக்கும்மெசினுக்கு

- வே. ராமசாமி

கோலிக்காய் கோட்பாடுகள்

அவரவர் வீட்டுப்பக்கம்
ஆட்டக்களம் அமையுங்கள்
சச்சரவுகளின்போது
அம்மாக்கள் வந்து
தீர்ப்பளிக்க ஏதுவாக

ஆடு மேய்க்க
அடம் பிடிக்க
மாடு பத்த
மறுக்க

இன்று
உவ்உவ் ஊதா
மஞ்சமஞ்ச மஞ்சை
நெத்தச்சிவப்பு
புத்தம்புதுக் கடசல்கள்
நேருக்குநேர் மோதல்

மழையைச் சபிக்க

டங்கான் கடன்
வெறும்பையோடு
வீடுதிரும்பல்

நீங்கள் ஆடும்போது
கசடுபவனை
நன்கு கவனிக்க

பித்தி போடாதே
ஏத்துங்கட்டு
கொழுவி விடாதே
உச்சிப்பிடி

கடைசிக்காய்
என்றாலும்
கை நடுங்காதே

மெத்தினால்
போட்டு வைக்க
காக்கிடவுசர் அணிக

உப்புக்குச் சப்பாணியை
துரத்தியடிக்க
கோலிமாயமாகும்
அபாயங்குறிTTHU

நூறுகோலி
வைத்திருப்பவன்
இல்லந்திறந்திருக்கும்
நேரம் அறிக
அவன் வீட்டுப் பரணயில்
புதையல் எடுக்க

உங்கள்
உலைமூடி நிறைந்த
கோலிச்செல்வங்களை
கிணற்றில் வீசிய
அப்பன்களின்
நெற்றிப் பொட்டைப் பெயர்க்க

இயலாதோர்
அண்டர் வேரையாவது
ஒளித்து வைக்க

வீட்டில் எதிர்ப்புள்ளோர்
வேலிமரத்தடியில் புதைக்க
கோழி கிளறிஎல்லாம்
பொதுவுடமை

ஒருகோலி = பத்து இலந்தைப்பழம்
பத்துக்கோலி = ஒரு உழக்கு புளியமுத்து
கோலி = திருச்செந்தூர்க் கடல்

- வே. ராமசாமி

கோழி V/S பருந்து

கோழிக்கு
பூஞ்சிறகு

ஆகவே இனி
பூவிதழில்
காது குடையாதீர்

பூவின்
இதழ் விரித்து
பறக்கவும் முடியாது

பருந்து
ராட்சசன்

அரக்கன்
இரும்பில்சிறகானாலும்
பறப்பான்

கோழிக்குஞ்சுகள்
பூக்குட்டிகள்

பூங்குட்டிகளை
கொத்தி வாழும்
கள்ளிப் பறந்து

கோழி
காளி

குஞ்சு தூக்க
இறங்கிய கழுகை
கொத்தி வீழ்த்தினாள்
எங்களூர் காளியாத்தா

ஆகவே இனி
நெருப்பிதழில்
காது குடையாதீர்
-----------------
இது
அடுக்காது

இவ்வளவு பெரிய
அயோக்கியனாக
இருந்துகொண்டு
பச்சைத்
தென்னங்கிளையின்
அண்மையில்
நின்றல்லவா
போட்டோ பிடிக்கிறாய்

- வே. ராமசாமி

Saturday, April 3, 2010

தீ


செல்லும்
திசைஎல்லாம்
ஊழித்தீ
பிடித்து துரத்தினாலும்
பூத்து வெடிக்கிற
ஒரு பொழுதுவரை
பத்திரமா இரு

என் கனவே நீ