ஒரு பொய்
என் நெஞ்சைப் பிளந்தது
அதைப் புன்முறுவலுடன்
ஏற்றுக்கொண்டேன்
என் கண்களை
அழக்கூடாது என்று
கேட்டுக்கொண்டேன்
ஆனால்
விழித்திரையின்
வேறொரு பக்கமிருந்து
கண்ணீர் பொத்துக்கொண்டது
ஒரு குற்றச்சாட்டு
வேரறுந்த கொடியின்
நுனிக் கொழுந்து போல்
என்னை ஆக்கிவிட்டது
ஒரு மின்னல் ரம்பம்
என்னை இரண்டாக
வகிடு எடுத்தது
நான்
மன்புழுவாய்த் துடித்தேன்
நான்கைந்து கத்திகள்
அடிவயிற்றில் இறங்கியது
நானோ
இன்னும் ஆழமாக
குத்தச் சொல்லி மன்றாடினேன்
ஒரு துரோகத்தைக் கொண்டாடி
அதை வென்று எடுத்தேன்
ஆனால்
இந்தக் கண்ணீர் மட்டும்
எங்கிருந்து வருகிறது
என்று தெரியவில்லை
கண்களில் இருந்து
வருவது மட்டுமே
கண்ணீர் அல்ல
இறந்து போவது மட்டுமே
இறப்பும் அல்ல
#
வே.ராமசாமி