Saturday, August 16, 2014

கார்த்திக் நேத்தாவின் "தவளைக்கல் சிறுமி '

சாத்தானின் கடவுள் பாகம் 
[கார்த்திக் நேத்தாவின் "தவளைக்கல் சிறுமி 'தொகுப்பை  முன்வைத்து]  
வே.ராமசாமி 


அச்சுக்குப் போவதற்கு முன்பே கார்த்திக் நேத்தாவின் "தவளைக்கல்  சிறுமி "நூலை வாசித்துப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது.அப்போது அதற்கு "தொல்காப்பியனின் பூனை "என்று அவர் பெயரிட்டிருந்ததாக நினைவு.தொகுப்பை படித்து விட்டு 'குழந்தையும் மனிதனும்'என்கிற ஒரே ஒரு கவிதையை மட்டும் விலக்கும்படிக்  கேட்டுக் கொண்டேன்.'நான் தற்கொலை செய்து கொள்ள வேறென்ன பெரிய காரணம் வேண்டும்'என்று அக்கவிதை முடியும்.அவர் கடைசி வரை அதை ஓப்புக் கொள்ளவில்லை..ஒரு நண்பனாக அவருடைய மன உலகை புரிய முயன்று எப்போதும் தோற்றே வந்திருக்கிறேன்.அதில் அவ்வப்போது வெற்றியும் கிடைத்து விடும் ."அம்மணமும் அற்றதே என் ஆடை"என்கிற அவரின் வரிகளே அதற்கு உதவி செய்யும்.. தற்கொலை செய்யக் காரணம் என்பது வாழ்வதற்கான முயற்சி என்று சொல்லி என்னை ஒரேயடியாகச் சாய்த்து விட்டார்.

கருப்பட்டித் துண்டுக்கு ஏங்கிய நாய்போல நல்ல கவிதை ஒன்றைப் படித்து விட மாட்டோமா என்று ஏங்கி அலைவதென் இயல்பு.கவிதை ரசிகர்கள் அனைவருக்கும் இதுதான் இயல்பாக இருக்கும் .உண்மையான கவிதை அனுபவத்திற்கு ஏங்கித் திரிபவர்கள் நீங்கள் என்றால் இந்தத் தொகுப்பை நீங்கள் படித்துத்தான் ஆக வேண்டும்.கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு வாசகனாக என் அயற்சியைப் போக்கியது இத்தொகுப்பு .

ஏனென்றால் எந்தக் கோரிக்கையும் இந்தக் கவிதைகள் வைக்கவில்லை .இச் சமூகத்திலிருந்து எதையும் பெற்றுக் கொள்ளத் துடிக்கவில்லை.மாறாக அள்ளி வழங்குகிறது."அந்தரத்தில் விதைத்த விதை ஆகாசமாய்ச் செழித்ததடி குட்டி என் செல்லம் "என்று புத்தரும் சித்தரும் கை கோர்த்துக் கொண்டு வருகிறார்கள்.'நான் பெற்று எடுப்பதற்குள் பிறந்தும் விடுகிறாள் பொம்மு'கொடிக் கயிற்றில் காயும் வெயிலை எடுத்துப் போக  இரவால் மட்டுமே முடியும்'என்று எளிய தரிசன வரிகளால் வாசகன் முகத்தில் கணம் தோறும் பச்சைத் தண்ணீரைத் தெளித்துக் கொண்டே இருக்கிறது.ஒருவரி குழந்தை போல் தவழ்ந்து நம்மை நோக்கி வருகிறது .மற்றொரு வரி ருத்ர பிண்டனாய் ஆவேசமாய் வருகிறது .

'காற்றின் தீராத பக்கங்களில் 'என்ற சொல்லிச் சொல்லி தேய்ந்து போன பிரமிளின் கவிதை..ராமச் சந்திரனா என்று கேட்டான்?என்ற நகுலனின் கவிதை ,பிறகு ஆத்மா நாமின் ஒன்றிரண்டு கவிதைகள்  ,'காதலைக் காதலென்றும் சொல்லலாம்' என்ற பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதை ..இப்படி ஒரு சில வரிகள் தானா நவீன கவிதையின் மைல் கற்கள்?இல்லை நிறைய வந்து விட்டது ..வானம் முழுக்க தெரியும்படி ஒரு ஜன்னல் கேட்கிற பிரான்சிஸ் கிருபா ..பிளாஸ்டிக் குவளையை மதுவை ஊற்றி பொன்னிறக் குவளை ஆக்குகிற இசை ..உள்ளங் கையில் 'அன்பின் குளத்தோடு' திரிகிற கடற்கரய்.. "நடனப் பெண்ணின் ஆடை அவிழ்ந்து கிடக்கிறது 'நிறைவேறாத காதலின் இரண்டு பெரிய கண்ணீர்த் துளிகள் என்று சொல்கிற குட்டி ரேவதி .பாறையில் கசியும் நீரை பாறையின் கண்ணீர் என்கிற தேன்மொழி ,பெண் நபி கேட்கிற ஹெச் .சி ரசூல் இப்படி நவீன கவிதையின் ஜீவ ஓட்டத்தில் பல வரிகள் இன்னும் சேர்க்கப் படாமலே இருக்கின்றன ..நண்பர்களைக் கேட்டால் இன்னும் சேர்க்க வேண்டிய நூறு வரிகளைச் சொல்வார்கள் .என்னைக் கேட்டால் ."பறவை இல்லாமல் பறக்கிறது இறகு " உயர உயரப் பறந்து உயர்திணை யானென எழுதி எழுதித் தெளிகிறது இறகு "கடற் சிறுமியின் அல்குல் 'புல் என்பது பனியின் வேர் 'நிறையப் பூச்சிகளைத் தின்றும் பறக்கத் தெரியாத சுடர் மனமா ?என்று நூறு வரிகளையும் கார்த்திக் நேத்தாவின் வரிகளாகவே சொல்லி விடுவேன்..

கார்த்திக் நேத்தா தன் முன்னோடியாகக் குறிப்பிடும் கவிஞர் பிரான்சிஸ் கிருபா .இருவரும் வானவில் நுனியை கவிதையில் அடிக்கடித் தொட்டுக் காட்டியவர்கள்.தள்ளு வண்டிக் கடையை 'தள்ளுவண்டி கோவில்காரன்"என்று எழுதி காவியம் படைப்பான் பிரான்சிஸ் ..இந்த வரிகளைப் அவருடைய" ஏழு வால்  நட்சத்திரம்' தொகுப்பில் படித்தபோது வியந்தேன் .இக்கவிதை படிக்காத மக்களுக்கும் விளங்கும் ..நவீன கவிதையை வாசிக்க உழைப்புத் தேவை என்ற  பம்மாத்தைப் போக்கியது.கிருபாவின் சில கவிதைகள் மவுன வாசிப்பை மக்கள் வாசிப்பாக மாற்றும் கூறுகளோடு இருப்பதை உணர்ந்து கார்த்திக் நேத்தாவிடம் இந்த அம்சத்தைத் தேடிப் பார்த்தேன் ..அமையவில்லை எல்லாக் கவிதையின் அடியிலும் மொழியின் சுரங்கப் பாதை நீண்டு கொண்டே போகிறது ..

தவளைக்கல் சிறுமியின் முக்கியக் கருதுகோள்கள் என்னவென்று பார்த்தால் இதில் உலவுகின்ற குழந்தைகள் ,பெண்கள்,  நாய், மீன், காற்று,வெளி எல்லாமே துறவு நிலையில் இருக்கின்றன.அஃறிணைகள் உயர்திணை  ஆகிவிடுகின்றன   இதை அவர் கவிதைகளில் காணப்படும் ஆன்மிகக் கூறு என்று சொல்வதை வாசகனாக என்னால் ஏற்க இயலவில்லை ..குழந்தைகள் பிறக்கும் போதே துறவிகளாகப் பிறந்து விடுகிறார்கள்.கார்த்திக் நேத்தாவின் கடவுளாகவும் அவர்களே இருக்கிறார்கள்.."குளத்திற்கு  கணநேரக்  கண்களைத் திறந்து விட்டுச் சிரிக்கிறாள் தவளைக்கல்  சிறுமி .என்று தொகுப்பின் தலைப்புக் கவிதையில் சொல்கிறவர் 'மழைக்கல்'என்கிற மற்றொரு கவிதையில் குளத்தின் கண்களாக மீன்கள் மெல்ல மெல்ல மேலே வந்து பார்க்கின்றன"என்று அசாத்திய தரிசனத்தை அளிக்கிறார்.மழைத் துளியை  உப்புச்சப்பற்ற பழமென்று கார்த்திக் உவமிப்பது வெறும் கற்பனை நோக்கிலானது மட்டுமல்ல .எல்லா வார்த்தைகளுக்கும் வாசகனின் அகத்திலிருந்து கவித்துவத்தை கிளறி எடுத்து வந்து கொட்டுகின்றன.வெறும் தரிசனமல்ல எல்லாமே அசாத்திய தரிசனங்கள் தான் ."ஒளி உருண்டை "இருள் முட்டை "கடவுளின் உதடுகளாய் கருப்பேறிய யோனி "மழையின் விந்துப் பிரவாகம் "சீப்பின் கூந்தல் "இப்படிக் கவிதையில் கிடக்கும் ஒற்றை வரிகளை எப்படி எளிதில் கடப்பது .வறட்சியில் கிடக்கும் வாசகன் நூறு வரிகளையும் கார்த்திக் நேத்தாவின் வரிகளாகவே சொல்லி விடுவான் என்று சொன்னதின்  காரணம் இதுவே .     
 
"ஒவ்வொரு நாளும் மாற்ற வேண்டிய உடையாக பிறப்புறுப்பும் இருக்க வேண்டும் 'அறுந்து தொங்கும்  கள்ளியில் ஒழுகும் பால் எனது காமம்.அப்போது போட்ட ஆட்டுப் புழுக்கைச் சூடு உனது காமம் "எனக் காமத்தைக் கொண்டாட்டமாக்கியவன், யோனியை  "என் கடிதம் தொலைந்த தபால் பெட்டி -அனாதிக்கனாதி-அயனும் மாலும் -பிறைமுடிச் சிவனும் பரிசாய் அனுப்பிய ஞானாட்சரம்-சாத்தானின் கடவுள் பாகம் -போதிமரம் அறியாத பேரிலை -தேவன் காட்டும் சூடம் "  என்றெழுதி தமிழ் நவீன கவிதையின் சாதனைக் கவிதையை நிகழ்த்துகிறான் .அது என்ன ?சாத்தானின் கடவுள் பாகம் ?எத்தனை அடுக்குகளை வரலாற்றை ..இந்த வரி திறந்து கொண்டு போகிறது . மண்டோதரியிடம் மணந்த ஒன்றை -நர்த்தன திலோத்தி மறுக்காத ஒன்றை -கவரி வீசிய கன்னியர் காட்டத் துடித்த ஒன்றை -சீதையிடம்  கேட்டுச் சீரழிந்ததே நின் பெருங் காமம்-ராவணா. இதிகாசத்தை -புராணத்தை -மரபை -வேறொரு வார்ப்பாக்கி கான்யாற்றங் கரையமர்ந்து -காற்றதிரா வண்ணம் யாழ் மீட்டும் 
அற்புதத்திற்கு ராவணா ஒரு சாட்சி ..பிரமிள் கார்த்திக்கின் ஆன்மாவுக்குள் இருப்பதற்கும் அந்தக் கவிதையே அத்தாட்சி ..

தமிழில் பெரும்பான்மையான கவிதைகள் நனவிடைத் தோய்தலாகவே இருப்பதை-அதில் ஒரு மட்டையடித் தன்மை இருப்பதை வாசகராக அனைவரும் எளிதில் உணர்ந்திருப்போம்.கார்த்திக் நேத்தாவின் கவிதைகள்தான் காட்டாற்று வெள்ளமாயிற்றே..அது எங்கேயும் தேங்கவில்லை.சொல்முறையில் கவிதைகள் நிகழ் தன்மையிலே இருக்கிறது .கவித்துவச் செறிவு ததும்பும் கவிதைகள் இப்படித்தாம் இருக்கும்.ஆனால் நினைவுகூரல்  கவிதை எழுதாமல்  எவரும் இருக்கவே முடியாது .தவளைக்கல் சிறுமியில் அவ்வண்ணம் 'மஞ்சள் மரணம்' என்ற  கவிதை உள்ளது.பிரபல வார இதழ் ஒன்றில் அது வெளியானது. அக் கவிதையோடு மரபை உள்ளீடாகக் கொண்டு எழுதிய சில கவிதைகளையும் அவர் அனுப்பியதும் வெகுஜன இதழான அவ்விதழ் மஞ்சள் மரணத்தையே வெளியிடும் என்ற எங்கள் இருவரின் முன்முடிவும்  சரியாக இருந்தது.

'இரவோடு இரவாகத் தூக்கு மாட்டிக்கொண்ட  பார்வதி  ஏன் என்னிடம் மட்டும் எலுமிச்சை தந்தாள்?எலுமிச்சை என்பது பழமில்லை எனக்கு .-மஞ்சள் மரணம்-மரணத்தின் புளிப்பு-சுழி  உதட்டுப் பார்வதியின் சுரோணிதம் "[சுரோணிதம் -தூமை ]என்று முடியும் கவிதையின் தொடக்க வரிகள் .."சைக்கிள் பயிலக் கற்றுத் தந்த தாத்தாவின் விரல் பிடித்து என் ஞாபகம் நடக்கும் இந்த வீதி அதே பழைய வீதியாக இருக்குமா ?எனத் தொடங்கும்.இக்கவிதையின் மற்ற வரிகளும் கதைத் தன்மையோடு இருக்கும்.சொல்முறையில் தொகுப்பிலிருந்து தனித்து நிற்கும் ஒரே கவிதை இது .ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் கவிதை முடியும் இடத்தில் கவிஞர் சாம்ராஜ் எழுதிய 'அவள் நைட்டி அணிந்ததில்லை 'என்ற கவிதை  தொடங்குகிறது   ..
'மரித்தலுக்குப்பின்  அம்மணமாய்க்  கிடக்கிறாள் மார்ச்சுவாரியில் ஈக்களும் கண்களும் 'அங்கேயே' மொய்க்க இப்படி ஆகுமெனில் அன்பு லட்சுமி தற்கொலையே செய்திருக்க மாட்டாள் " வாழ்நிலையும் அனுபவமும் வேறு வேறு என்றாலும்   இந்த இரண்டு கவிதைகளும்  ஒன்றுக்கொன்று கவித்துவப் பரி மாற்றத்தை நிகழ்த்திக் கொள்கின்றன.. பார்வதி -அன்பு லட்சுமி பெயர்களை மாற்றிவிட்டு இரண்டு கவிதைகளையும் ஓன்று சேர்த்துப் படிக்கலாம்..

மற்றுமொரு மாபெரும் வியப்பு என்னவென்றால் வாழ்வே மதுவாகிப் போனவன் கவிதையில் மது எங்கேயும் இடம் பெறவில்லை .ஒருவேளை மதுவை புத்தராக -இலையாக -மீனாக -காற்றாக -யோனியாக -மாற்றிப் பாடிவிட்டரா புரியவில்லை ..அதைப்போல மழை கார்த்திக் நேத்தாவின் கவிதைளில் பெரிய கவனம் பெறவில்லை . உண்மையில் மழை பெரிய கவனம் பெறாதது   அவரின் கவிதைகளுக்குச் சிறப்பான அம்சம்தான்.மலையாளக் கவிஞர் ஆ.அய்யப்பன் குறித்து அழகிய பெரியவன் எழுதிய சிறிய கட்டுரை ஒன்றைப் படித்தேன்.அவரைப் போன்ற கட்டுடைத்த வாழ்க்கையும் எழுத்தும்தான் கார்த்திக் நேத்தாவினுடயது..இன்னும் சொல்லப் போனால் பழைய பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ...

"தவளைக்கல் சிறுமி "தொகுப்பை 'க்ரியா'பதிப்பகம் தேடிப்பிடித்து வெளியிட்ட வரலாறு எனக்குத் தெரியும் .இத்தொகுப்பை வெளியிட்டதன் மூலம் க்ரியா நவீன தமிழ் கவிதைக்கு ஒரு பொக்கிசத்தை வழங்கியுள்ளது.தமிழின்  கவிதை விமர்சகர்கள் இதனை மேலும் மதிப்பிட வேண்டும். ..இது எப்போதாவது நிகழக் கூடிய அற்புதம் ..என் நண்பர் என்பதால் மிகக் குறைவாகவே இதை மதிப்பிட்டுள்ளேன்.நீங்கள் வேறொரு கவிதா அனுபத்தை இதில் பெறக் கூடும்  மீண்டும் சொல்கிறேன் ,நீங்கள் உண்மையான கவிதை அனுபவத்திற்கு ஏங்கித் திரிபவர்கள் என்றால் இந்தத் தொகுப்பை படியுங்கள் 

  
  

வெளியீடு 
க்ரியா -{044-24513993}
விலை 100
பக்கங்கள் 72
                                                                                       உங்கள் நூலகம் 'ஆகஸ்ட் 14

'பறவையே எங்கு இருக்கிறாய்?"

'பறவையே எங்கு இருக்கிறாய்?"


நிழற்படம் எடுப்பதில் எனக்கு ஆர்வம் கிடையாது அதில் நிபுணர் ஆகும் எண்ணம் எப்போதும் ஏற்படாது .ஆனால் பறவைகளை எடுப்பதற்கு தற்செயலாக விருப்பம் ஏற்பட்டு விட்டது
சிறிய வயதில் ஊரில் உள்ள எல்லாப் பயல்களும் கவட்டை வில் செய்து பறவைகளை அடித்துச் சுட்டுத் தின்பார்கள் .நானும் பறவைகளைக் குறி வைத்திருக்கிறேன் .குருவிக் கறி மிகவும் சுவையாக இருக்கும்.மிளகாய்த் தூள் உப்புச் சேர்த்து தீயில் வாட்டித் தின்போம்.வாட்டும் முன் அண்டிப் பகுதியில் அறுத்து குடலை நீக்கி விடுவோம்.புறாக் கிடைக்கும் பட்சத்தில் வீட்டிலேயே குழம்பு வைத்துத் தருவார்கள் .மஞ்சக் காமாலை வந்தவர்கள் காக்கா கறி தின்பார்கள் .தைலான் ,கொக்கு எனப் பறவைகள் கறி வைத்து தின்ற வகையில் மட்டும் அப்போது முக்கியமானது.கொக்கில் இறைச்சியே இருக்காது.தீயில் இலேசாகக் காட்டினாலே கறி இளகி விடும்.கொக்கோடு சுரைக்காய் சேர்த்து குழம்பு வைக்கலாம் என்று அம்மா சொல்வார். இரண்டு மூன்று கொக்குகள் சேர்ந்தால் நாக்குப் பட தின்று பார்க்கலாம்.

பால்யத்தில் கறியின் பொருட்டும் கவட்டை வில் சாகசத்தின் பொருட்டுமே பறவைகள் அறிமுகம்.செவக்காட்டில் வேர்க்கடலை ஊன்றினால் அதைத் கொத்திக் கிளைக்கும் பறவைகளை அடித்து விரட்டினால் வீட்டில் பாராட்டும் துட்டும் கிடைக்கும் .செல்லம் குழைந்தும் கொள்ளலாம்.கேப்பை .சோளம் ,கம்மங் கதிர் பயிர்களுக்கு தகர டின் தட்டும் போது கிளிகள் மற்றும் படை குருவிகளின் தொல்லை தெரிய வரும். பறவைகள் என்றால் அப்போது அவ்வளவுதான்.

"நேசனல் புக் டிரஸ்ட்"வெளியிட்ட சிட்டுக் குருவியின் வீழ்ச்சி'புத்தகத்தை தமிழில் சூழலியல் இவ்வளவு கவனம் பெறாத காலத்தில்வாசித்திருக்கிறேன்.அப்போது ஏதும் மனதில் தோன்றவில்லை.விலை குறைவாக இருந்ததால் வாங்கிப் படித்த புத்தகம் அது .

ஒருமுறை கவிஞர் ச.முத்துவேல் அவர்களைச் சந்திக்க கல்பாக்கம் சென்றபோது அவர் பறவைகளைத் தேடித் தேடிப் பார்த்தார் . .பறவைகள் படமிட்ட புத்தகமும் வைத்திருந்தார் ..நான் வேண்டா வெறுப்பாக அவருடன் செல்வேன் .'மீன் கொத்தியப் போல நீ கொத்துற 'ஆடுகளம்'படப் பாடல் [சினேகன்] பிரபலமாய் இருந்த நேரம் அது அந்த வரிகளைச் சிலாகித்து என்னைத் சுவராசியப் படுத்தி..மீன்கொத்தி பார்க்கலாம் என்று அழைத்துச் சென்றார் .சொன்னபடியே ஒரு குட்டையில் வெள்ளை மீன்கொத்தி, மீன் கொத்திப் பிடிக்கும் அழகை ரசித்தோம்.வரும் வழியில் பனங்காடையை நான் அவருக்கு அடையாளம் காட்டினேன் .பறவைகளை கவனிக்க வேண்டுமென முடிவெடுத்து பின்னர் மறந்து விட்டேன் .

பின்னாட்களில் அருண் நெடுஞ்செழியன் நண்பரானார்.அவரின் மூலம் காட்டுயிர் படக் கலைஞரும் சமீபத்தில் 'பனுவல்'வெளியிட்ட 'தமிழகத்தில் இரவாடிகள்' என்ற பறவையியல் நூலின் ஆசிரியருமான அ.சண்முகானந்தம் அவர்களின் அறிமுகம் கிட்டியது.
அவருடன் கோடியக்கரை செல்லும் வாய்ப்புக் கிட்டியது.அங்கு
கவிஞர்கள் வெய்யில் .நக்கீரன் இருவரும் வந்திருந்தனர் .நானும் வெய்யிலும் சண்முகானந்தம் காமிராவை வாங்கி ஓடி ஓடி 'வெளிமான்களை'படம் பிடிக்க முயன்று தோற்றோம்.அப் பயணத்திற்குப் பிறகு சில காடுகளுக்கு லெனின் லிங்கராஜா .அருண் ,பாலா சுப்பு ,ஆகியோரோடு சென்றாலும் அவர்கள் தீவிரமாகப் படம் பிடிக்க நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு உடனிருப்பேன்.பாலா பைனாக்குலர் வைத்திருப்பார் .

தற்பொழுது ஊரில் இருக்கும் இந்த காலத்தில் பறவைகளைப் பிடிக்க வேண்டுமென்று திட்டமிடவில்லை..எங்கள் பகுதியைச் சேர்ந்த லெனின் லிங்கராஜா.எனது ஊருக்கு வந்தார்.கோவில்பட்டி ரோட்டு மேல் எங்க ஊர் விலக்கில் உள்ள ஆலமரத்தினடியில் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் மரத்தில் நின்ற பெண்குயிலை அவர் படம் பிடித்தார்.அவர் சென்னை சென்ற மறுநாள் நான் அதே குயிலை ஆர்வத்தின் காரணமாய்ப் படம் பிடித்தேன் .அதை முகநூலில் பதிவிட்டேன்.அதைப் பார்த்த லெனின்,அதே இடத்தில் ஆண்குயில் கண்டிப்பாக வரும் .அதனையும் பிடிக்கச் சொன்னார் .கருங்குயிலையும் பிடித்தேன் ."குயில் பாடலாம் தன் முகங் காட்டுமா? "என்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளுக்கு ஏற்ப குயில் ஆலமர இலைகளுக்கிடையே பதுங்கிய படத்தை பதிவிட்டாலும் முகநூல் நண்பர்களின் பாராட்டு உற்சாகத்தைக் கொடுத்தது.ஆலம் பழம் பழுத்தால் அங்கு "குக்குறுவான்"பறவை வரும் என்றார் லெனின் .அதைத் தேடினேன் .அது கிடைக்கவில்லை .கிடைத்த பிற பறவைகளை எடுக்க ஆரம்பித்தேன் .சிறு வயதில் பார்த்த பறவைகளை தேடத் தொடங்கினேன் .என் வீடு வயல் ஓரத்தில் இருந்ததால் சில பறவைகளை எளிதில் எடுக்க முடிந்தது .என் துணைவியார் வீடும் வயல் ஓரத்தில் அமைந்திருந்தது மேலும் வசதியாய்ப் போனது

எங்கே போனாலும் காமிராவைக் எடுத்துச் சென்றேன் .சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள மலையான்குளம் -செவல் குளம்,கள்ளிகுளம்,மருதப்புரம்,சண்முகநல்லூர் .கருத்தானூர்.கிருஷ்ணாபுரம் சிதம்பராபுரம்.ரெட்டியபட்டி வேப்பங்குளம் ''வெள்ளங்குளம்,வாகைக்குளம் .அழகனேரி,குருவிகுளம் ,பாட்டத்தூர் ,ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களில் படம் பிடித்தேன் .என் ஊரிலிருந்து எந்தப் பக்கம் போனாலும் பத்துக்கிலோ மீட்டர் தாண்டவில்லை..

பவளக்கால் உள்ளான் வந்தபோது காமிரா இல்லாமல் போனது மிக கவலையாக இருந்தது..புள்ளிவாத்து முதலில் காமிராவில் சிக்காமல் விமானம் போல பறந்த விதம் எப்போதும் மறக்காது கரண்டி வாயன் எங்கிருந்தோ முதல் முறையாக எங்கள் ஊருக்கு வந்தான்.வால்காக்கை உள்ளிட்ட சில பறவைகளை சிறு பிராயத்தில் பார்த்ததே இல்லை. கருப்புத் தலை மைனாவைக் முதன் முதலில் கண்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. , கோட்டான் என்னையும் லெனினையும் வெயிலில் வாட வைத்தது கவுதாரியும் குக்குறுவானும் இன்னும் தெளிவான படமாகக் கிடைக்கவில்லை .சத்திமுத்தப் புலவரின் நாரையைப் பிடிக்கையில் உணர்ச்சி வசப்பட்டேன்.அண்ணன் அவைநாயகன் முகநூல் பதிவுகளுக்கு கருத்திட்டது மகிழ்ச்சியாய் இருந்தது .எனது அம்மா பெரும்பாலான பறவைகளுக்கு வட்டாரப் பெயர் என்னிடம் சொன்னாலும் நான் குழப்பம் ஏற்படும் என்று அதைப் பதியவில்லை.தமிழ்ப் பெயரை மட்டும் தெரிந்த பறவைகளுக்கு குறிப்பிட்டேன் .பயோனியல் பெயரை லெனினும் அவை நாயகன் அவர்களும் தொடர்ந்து குறிப்பிட்டு வந்தனர் .பாம்பே நேச்சுரல் முகனூலில் பதிவிட்டதும் உதவியது .அதில் பலர் இந்தியா முழுவதும் இருந்து பதிந்த வண்ணப் பறவைகள் போல எனது நிலத்தில் இல்லை .மண்ணுக்கேற்ற வகையில் குருவிகளுக்கும் வண்ண நிறம் கிடைக்கவில்லை என்று எண்ணிக் கொண்டேன் ..பதிவிட்ட வேளையில் பாராட்டிய நண்பர்களுக்கு மிகவும் நன்றி .என்னைப் புதிப்பிக்க பறவைகள் பயன்பட்டது .இன்னும் நிறைய பறவைகளுடனான அனுபவங்கள் முட்டி மோதினாலும் விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறேன் .

சென்னை திரும்ப இருக்கிறேன் இப்போது ஊரில் இருந்தது போல் இனி வரும் நாட்களில் நீண்டநாள் இருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று தோன்றவில்லை ..பறவை தேடிய பயணத்தை தற்காலிகமாக
முடித்துக் கொள்கிறேன் ..இனி பாடலைத் தேடி அல்லது வாழ்வைத் தேடிய பயணத்தைத் தொடர்கிறேன்...
                                                                                                                           
                                                                                                                                   வே.ராமசாமி
.                                                                                                               "சூரிய கதிர் 'மாதஇதழ்                                                                                                                                           ஆகஸ்ட்"2014