Saturday, August 16, 2014

'பறவையே எங்கு இருக்கிறாய்?"

'பறவையே எங்கு இருக்கிறாய்?"


நிழற்படம் எடுப்பதில் எனக்கு ஆர்வம் கிடையாது அதில் நிபுணர் ஆகும் எண்ணம் எப்போதும் ஏற்படாது .ஆனால் பறவைகளை எடுப்பதற்கு தற்செயலாக விருப்பம் ஏற்பட்டு விட்டது
சிறிய வயதில் ஊரில் உள்ள எல்லாப் பயல்களும் கவட்டை வில் செய்து பறவைகளை அடித்துச் சுட்டுத் தின்பார்கள் .நானும் பறவைகளைக் குறி வைத்திருக்கிறேன் .குருவிக் கறி மிகவும் சுவையாக இருக்கும்.மிளகாய்த் தூள் உப்புச் சேர்த்து தீயில் வாட்டித் தின்போம்.வாட்டும் முன் அண்டிப் பகுதியில் அறுத்து குடலை நீக்கி விடுவோம்.புறாக் கிடைக்கும் பட்சத்தில் வீட்டிலேயே குழம்பு வைத்துத் தருவார்கள் .மஞ்சக் காமாலை வந்தவர்கள் காக்கா கறி தின்பார்கள் .தைலான் ,கொக்கு எனப் பறவைகள் கறி வைத்து தின்ற வகையில் மட்டும் அப்போது முக்கியமானது.கொக்கில் இறைச்சியே இருக்காது.தீயில் இலேசாகக் காட்டினாலே கறி இளகி விடும்.கொக்கோடு சுரைக்காய் சேர்த்து குழம்பு வைக்கலாம் என்று அம்மா சொல்வார். இரண்டு மூன்று கொக்குகள் சேர்ந்தால் நாக்குப் பட தின்று பார்க்கலாம்.

பால்யத்தில் கறியின் பொருட்டும் கவட்டை வில் சாகசத்தின் பொருட்டுமே பறவைகள் அறிமுகம்.செவக்காட்டில் வேர்க்கடலை ஊன்றினால் அதைத் கொத்திக் கிளைக்கும் பறவைகளை அடித்து விரட்டினால் வீட்டில் பாராட்டும் துட்டும் கிடைக்கும் .செல்லம் குழைந்தும் கொள்ளலாம்.கேப்பை .சோளம் ,கம்மங் கதிர் பயிர்களுக்கு தகர டின் தட்டும் போது கிளிகள் மற்றும் படை குருவிகளின் தொல்லை தெரிய வரும். பறவைகள் என்றால் அப்போது அவ்வளவுதான்.

"நேசனல் புக் டிரஸ்ட்"வெளியிட்ட சிட்டுக் குருவியின் வீழ்ச்சி'புத்தகத்தை தமிழில் சூழலியல் இவ்வளவு கவனம் பெறாத காலத்தில்வாசித்திருக்கிறேன்.அப்போது ஏதும் மனதில் தோன்றவில்லை.விலை குறைவாக இருந்ததால் வாங்கிப் படித்த புத்தகம் அது .

ஒருமுறை கவிஞர் ச.முத்துவேல் அவர்களைச் சந்திக்க கல்பாக்கம் சென்றபோது அவர் பறவைகளைத் தேடித் தேடிப் பார்த்தார் . .பறவைகள் படமிட்ட புத்தகமும் வைத்திருந்தார் ..நான் வேண்டா வெறுப்பாக அவருடன் செல்வேன் .'மீன் கொத்தியப் போல நீ கொத்துற 'ஆடுகளம்'படப் பாடல் [சினேகன்] பிரபலமாய் இருந்த நேரம் அது அந்த வரிகளைச் சிலாகித்து என்னைத் சுவராசியப் படுத்தி..மீன்கொத்தி பார்க்கலாம் என்று அழைத்துச் சென்றார் .சொன்னபடியே ஒரு குட்டையில் வெள்ளை மீன்கொத்தி, மீன் கொத்திப் பிடிக்கும் அழகை ரசித்தோம்.வரும் வழியில் பனங்காடையை நான் அவருக்கு அடையாளம் காட்டினேன் .பறவைகளை கவனிக்க வேண்டுமென முடிவெடுத்து பின்னர் மறந்து விட்டேன் .

பின்னாட்களில் அருண் நெடுஞ்செழியன் நண்பரானார்.அவரின் மூலம் காட்டுயிர் படக் கலைஞரும் சமீபத்தில் 'பனுவல்'வெளியிட்ட 'தமிழகத்தில் இரவாடிகள்' என்ற பறவையியல் நூலின் ஆசிரியருமான அ.சண்முகானந்தம் அவர்களின் அறிமுகம் கிட்டியது.
அவருடன் கோடியக்கரை செல்லும் வாய்ப்புக் கிட்டியது.அங்கு
கவிஞர்கள் வெய்யில் .நக்கீரன் இருவரும் வந்திருந்தனர் .நானும் வெய்யிலும் சண்முகானந்தம் காமிராவை வாங்கி ஓடி ஓடி 'வெளிமான்களை'படம் பிடிக்க முயன்று தோற்றோம்.அப் பயணத்திற்குப் பிறகு சில காடுகளுக்கு லெனின் லிங்கராஜா .அருண் ,பாலா சுப்பு ,ஆகியோரோடு சென்றாலும் அவர்கள் தீவிரமாகப் படம் பிடிக்க நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு உடனிருப்பேன்.பாலா பைனாக்குலர் வைத்திருப்பார் .

தற்பொழுது ஊரில் இருக்கும் இந்த காலத்தில் பறவைகளைப் பிடிக்க வேண்டுமென்று திட்டமிடவில்லை..எங்கள் பகுதியைச் சேர்ந்த லெனின் லிங்கராஜா.எனது ஊருக்கு வந்தார்.கோவில்பட்டி ரோட்டு மேல் எங்க ஊர் விலக்கில் உள்ள ஆலமரத்தினடியில் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் மரத்தில் நின்ற பெண்குயிலை அவர் படம் பிடித்தார்.அவர் சென்னை சென்ற மறுநாள் நான் அதே குயிலை ஆர்வத்தின் காரணமாய்ப் படம் பிடித்தேன் .அதை முகநூலில் பதிவிட்டேன்.அதைப் பார்த்த லெனின்,அதே இடத்தில் ஆண்குயில் கண்டிப்பாக வரும் .அதனையும் பிடிக்கச் சொன்னார் .கருங்குயிலையும் பிடித்தேன் ."குயில் பாடலாம் தன் முகங் காட்டுமா? "என்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளுக்கு ஏற்ப குயில் ஆலமர இலைகளுக்கிடையே பதுங்கிய படத்தை பதிவிட்டாலும் முகநூல் நண்பர்களின் பாராட்டு உற்சாகத்தைக் கொடுத்தது.ஆலம் பழம் பழுத்தால் அங்கு "குக்குறுவான்"பறவை வரும் என்றார் லெனின் .அதைத் தேடினேன் .அது கிடைக்கவில்லை .கிடைத்த பிற பறவைகளை எடுக்க ஆரம்பித்தேன் .சிறு வயதில் பார்த்த பறவைகளை தேடத் தொடங்கினேன் .என் வீடு வயல் ஓரத்தில் இருந்ததால் சில பறவைகளை எளிதில் எடுக்க முடிந்தது .என் துணைவியார் வீடும் வயல் ஓரத்தில் அமைந்திருந்தது மேலும் வசதியாய்ப் போனது

எங்கே போனாலும் காமிராவைக் எடுத்துச் சென்றேன் .சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள மலையான்குளம் -செவல் குளம்,கள்ளிகுளம்,மருதப்புரம்,சண்முகநல்லூர் .கருத்தானூர்.கிருஷ்ணாபுரம் சிதம்பராபுரம்.ரெட்டியபட்டி வேப்பங்குளம் ''வெள்ளங்குளம்,வாகைக்குளம் .அழகனேரி,குருவிகுளம் ,பாட்டத்தூர் ,ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களில் படம் பிடித்தேன் .என் ஊரிலிருந்து எந்தப் பக்கம் போனாலும் பத்துக்கிலோ மீட்டர் தாண்டவில்லை..

பவளக்கால் உள்ளான் வந்தபோது காமிரா இல்லாமல் போனது மிக கவலையாக இருந்தது..புள்ளிவாத்து முதலில் காமிராவில் சிக்காமல் விமானம் போல பறந்த விதம் எப்போதும் மறக்காது கரண்டி வாயன் எங்கிருந்தோ முதல் முறையாக எங்கள் ஊருக்கு வந்தான்.வால்காக்கை உள்ளிட்ட சில பறவைகளை சிறு பிராயத்தில் பார்த்ததே இல்லை. கருப்புத் தலை மைனாவைக் முதன் முதலில் கண்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. , கோட்டான் என்னையும் லெனினையும் வெயிலில் வாட வைத்தது கவுதாரியும் குக்குறுவானும் இன்னும் தெளிவான படமாகக் கிடைக்கவில்லை .சத்திமுத்தப் புலவரின் நாரையைப் பிடிக்கையில் உணர்ச்சி வசப்பட்டேன்.அண்ணன் அவைநாயகன் முகநூல் பதிவுகளுக்கு கருத்திட்டது மகிழ்ச்சியாய் இருந்தது .எனது அம்மா பெரும்பாலான பறவைகளுக்கு வட்டாரப் பெயர் என்னிடம் சொன்னாலும் நான் குழப்பம் ஏற்படும் என்று அதைப் பதியவில்லை.தமிழ்ப் பெயரை மட்டும் தெரிந்த பறவைகளுக்கு குறிப்பிட்டேன் .பயோனியல் பெயரை லெனினும் அவை நாயகன் அவர்களும் தொடர்ந்து குறிப்பிட்டு வந்தனர் .பாம்பே நேச்சுரல் முகனூலில் பதிவிட்டதும் உதவியது .அதில் பலர் இந்தியா முழுவதும் இருந்து பதிந்த வண்ணப் பறவைகள் போல எனது நிலத்தில் இல்லை .மண்ணுக்கேற்ற வகையில் குருவிகளுக்கும் வண்ண நிறம் கிடைக்கவில்லை என்று எண்ணிக் கொண்டேன் ..பதிவிட்ட வேளையில் பாராட்டிய நண்பர்களுக்கு மிகவும் நன்றி .என்னைப் புதிப்பிக்க பறவைகள் பயன்பட்டது .இன்னும் நிறைய பறவைகளுடனான அனுபவங்கள் முட்டி மோதினாலும் விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறேன் .

சென்னை திரும்ப இருக்கிறேன் இப்போது ஊரில் இருந்தது போல் இனி வரும் நாட்களில் நீண்டநாள் இருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று தோன்றவில்லை ..பறவை தேடிய பயணத்தை தற்காலிகமாக
முடித்துக் கொள்கிறேன் ..இனி பாடலைத் தேடி அல்லது வாழ்வைத் தேடிய பயணத்தைத் தொடர்கிறேன்...
                                                                                                                           
                                                                                                                                   வே.ராமசாமி
.                                                                                                               "சூரிய கதிர் 'மாதஇதழ்                                                                                                                                           ஆகஸ்ட்"2014

No comments: